Saturday, July 19, 2008

கல்விக் கூட அவலங்கள்.

வணக்கம்.

" வயிற்றுக்கு சோற்றிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்.

பயிற்று பல கல்வி தந்து இந்த பாரினை உயர்த்திட வேண்டும். "


இது பாரதியார் பாடியது. இதை ஒரு கனவு, ஆசை என்பதை விட ஒரு கடமை என்றே பாடி இருக்கிறார். அதனால் தான் கல்வியை ஒரு சேவை என்றே பலரும் செய்து வந்து இருக்கிறார்கள்.

ஆனால் இன்று நிலைமையோ வேறு.

நான் சமீபத்தில் இந்தியா சென்று வந்திருந்தேன். ஜூன் மாதம் என்பதால் பலரும் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைகளில் சற்று மும்முரமாக இருந்தார்கள். அதில் என் நண்பன் தன் மூன்று வயது மகனுக்கு ஒரு பிரபல பள்ளியில் சேர்க்கை கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டான். அந்தப் பள்ளியில் கேட்கும் தகுதிகள் சற்று அளவுக்கு மீறியதாக எனக்குத் தெரிந்தது. அவன் கூறிய கட்டணமோ என் தலையையே சுற்றியது. இன்றைய சூழ்நிலையில் தரமான கல்வியை தருவதற்கு பெரும் பொருள் செலவழிக்க வேண்டும் என்பது சத்தியமான உண்மை.

இன்று கல்வி பெரிதும் வருமானம் ஈட்டக் கூடிய ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. முன்பு கல்விச் சேவை செய்து கொண்டு இருந்த பெரும் தொண்டு நிறுவனங்கள் இன்று காணாமல் போய் விட்டன. முன்பு கல்விக்கூடங்களை அரசாங்கமும், கள்ளுக் கடைகளை தனியாரும் நடத்தி வந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழ். டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. சில தனியாரோ கல்வியை ஒரு தொழிலாக மாற்றிவிட்டனர்.

இன்று நம்மிடையே வாழும் பெரும் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம். ஆனால் இன்று அரசுப் பள்ளிகளின் நிலைமை பெரும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஆராய்ச்சிக்கூடம் போன்ற சரியான வசதிகள் செய்து கொடுக்கப் படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் போதுமான் ஆசிரியர்கள் கூட அமர்த்தப்படுவதில்லை. அப்படி தவறி சில பள்ளிகளில் இருந்தால் கூட சில தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது. நகரங்களில் மட்டுமே பெரிதும் இருந்து வந்த இந்த எண்ணம் இன்று மெதுவாக கிராமங்களிலும் தொற்றிக்கொண்டு வருகிறது.
இந்த அவல நிலையை இன்று சில சுயநலவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தரமானக் கல்வியை இன்று பல குடும்பங்களுக்கு எட்டாக் கணியாக்கி விட்டனர். இந்த சூழ்நிலையில் நாம் அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் சமமான ஒரு வாய்ப்பளிக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறோம். இன்று பணம் படைத்தவர்கள் மட்டுமே நல்ல கல்வியை பெற முடியும்.


இது கல்வியை மட்டும் அல்ல விளையாட்டையும் சேர்த்தே பாதிக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டும் கல்விக் கூடங்களில் தான் தொடங்குகிறது. வேறு சில முன்னேறிய நாடுகள் போல் இங்கு தனி விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு நம் பெற்றோர்களிடையே வரவேற்பு இருப்பதில்லை. நம்மில் பலரும் விளையாட்டை ஒரு கல்வி சார்ந்த (Extra-Curricular) அம்சமாகவே பாவித்து வருகிறோம். எனவே இன்று பல திறமையாளர்களை கண்டெடுக்கும் முக்கிய கடமையும் நம் பள்ளிக் கூட்டங்களுக்கு உண்டு. ஆனால் சரியான பயிற்சி வசதிகள் இல்லாமல் எந்தப் பள்ளியாலும் அதை செய்ய முடியாது. உதாரணத்திற்கு எந்த அரசுப் பள்ளிகளிலும் நீச்சல் குளம் இருப்பதில்லை. ஒரு கிராமத்தில் ஒரு மீனவ சிறுவனுக்கு நன்றாக நீந்த தெரிந்தாலும் அதை மெருகேற்றி அவனை ஒரு பெல்ப்ஸ் ஆக மாற்ற இன்று எந்த பள்ளியிலும் வசதிகள் இல்லை. அதற்கு அந்த சிறுவன் நகரங்களில் சில விலை உயர்ந்த பள்ளிக்கூடங்களில் படித்தாக வேண்டும். கல்வியைப் போல் விளையாட்டையும் இன்று சில பணக்காரர்கள் மட்டுமே பயில முடியும். இந்த நிலையில் " நூறு கோடி மக்களுக்கு ஒரு தங்கமா" என்று நம்மில் சிலர் வருத்தபடுவது அர்த்தமற்றது. ஏனெனில் இன்றைய போட்டி அபினவ் போன்ற சில பணக்கார பிள்ளைகளுக்கு மத்தியில் தான்.

அதற்காக அபினவ் என்ற அந்த இளைஞனின் கடும் முயற்சியையும், மன திடத்தையும் யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தியாவை ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இடம்பெற செய்தது நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டிய ஒன்று. அதே சமயம், இன்று அபினவ் போல் திறமையும், ஆர்வமும், உழைப்பும் தர பலர் தயாராக இருந்தாலும், அனைவருக்கும் பொருள் வசதி இருப்பதில்லை என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். இது மாறியாக வேண்டும். மாற்றியாக வேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனை ஒலிம்பிக் போட்டியானாலும் இதே நிலைதான் தொடரும். ஏனெனில் இன்று இந்தியாவில் சில பள்ளிகளில் கேட்பது போல், நோபல் பரிசுகளும். ஒலிம்பிக் தங்க பதக்கங்களும் யாரும் நன்கொடை வாங்கிக் கொண்டு தருவது இல்லை.

நன்றி,

சரவணன்.

No comments: