Tuesday, April 29, 2008

புகையும் பூசல்

நெருப்பில்லாமல் இது நாள் வரை புகைந்து வந்த பாறைகள் சமீபத்தில் இரு மாநிலங்களிலும் நெருப்பை மூட்டியுள்ளன. இந்தப் பிரச்சனை புதிதாக முளைத்தது அல்ல. காவேரி என்னும் ஒரு பழைய யுத்தத்தில் ஒகேநேக்கல் குடிநீர் திட்ட மறுப்பு ஒரு புதிய களம். 1950 முதலே தொடங்கிவிட்ட உரிமை பிரச்சனை.

இந்திய வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் இதன் அவலம் புரியும். இந்தியா குடியரசு ஆவதற்கு முன்பு அதன் வரை படம் வேறு விதமாகத்தான் இருந்தது. தென் இந்தியாவை பொறுத்த மட்டில் மைசூர், மதராஸ், மலபார் என்று ஆங்கிலேயரும் வேறு சில அரச குடும்பத்தினரும் தங்கள் எல்லைகளை வகுத்து இருந்தனர். அப்பொழுது சேலம், உதகைமண்டலம், ஒகேநேக்கல் என சிலப் பகுதிகள் மைசூர் மாகாணத்திடம் இருந்து வந்தது. ஆனால் 1950 உடன்படிக்கையின் படி இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த பொழுது இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப் பட்டன. அந்த உடன்படிக்கையின் பொழுது தமிழ்நாடு அடைந்ததை விட இழந்ததே அதிகம். ஆனால் ஒரு எல்லை ஒழுங்குக்காகவும் சில அரசாங்க வசதிகளுக்காகவும் இப்படி பல மாநிலங்களில் நடந்தது. அப்பொழுதிலிருந்தே கர்நாடகம் ஒகேநேக்கல்லை தன் எல்லைக்குள் சேர்க்கும் எண்ணத்திலேயே தொடர்ந்து இருந்து வந்தது. அந்த எண்ணத்தின் ஒரு வளர்ந்த வெளிப்பாடுதான் இந்தப் பிரச்சனை.

ஆனால் அதே கர்நாடகம் மகாராஷ்டிர எல்லையில் உள்ள, முழுவதுமே மராத்தியே பேசிக்கொண்டிருக்கும் மக்கள் வசிக்கும் பெல்காமை மகராஷ்டிரத்திடம் தரத் தயாராக இல்லை. வருடத்தில் பத்து நாள் தன் சட்டசபையை பெல்காமில் கூட்டி தன் உரிமையை உறுதிப்படுத்தி வருகின்றனர். கர்நாடகத்தின் இந்த இரட்டை தனம் வன்மையாகக் கண்டிக்க வேண்டிய ஒன்று.

இந்த 58 வருட வரலாற்றை மறந்தாலும் சமீபத்தில் 1998ல் இரு மாநிலமும் குடிநீர் திட்டங்களை வகுத்த போதே இரு மாநில முதல்வர்களாலும் ஆட்சேபனை ஏதுமின்றி முடிவான திட்டம் தான் இந்த ஒகேநேக்கல் குடிநீர் திட்டம். அந்தத் திட்டத்தை இப்பொழுது கர்நாடகம் மறுப்பது ஒரு துரோகச் செயல்.

ஒகேநேக்கல்லில் உரிமை கொண்டாட கர்நாடகம் கூறும் மற்றுமொரு காரணம் அதன் பெயர் கன்னடத்தில் இருப்பதாகும். பெங்களுரு சென்ற நண்பர்கள் அங்கு கண்டோன்மென்ட் என ஒரு பகுதி இருப்பதை பார்த்து இருப்பார்கள். அது ஆங்கிலப் பெயராக இருப்பதனால் மட்டுமே அதை இங்கிலாந்து கேட்டால் கர்நாடகம் அதை கொடுக்க முன்வரமுடியுமா? அதை ஒரு காரணமாகக் கூறுவதே ஒரு முதிர்ச்சியற்ற செயல். குழந்தைத்தனமான வாதம்.

எது எப்படி இருந்தாலும், இது இன்று பெரிதாக வெடித்துவிட்டது. பலரும் பல விதமாக கண்டித்து இருக்கிறார்கள். சிலர் மென்மையாக, சிலர் வன்மையாக. யார் செய்தது சரி என்று விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் நம் எதிர்ப்பை அனைவரும் ஒற்றுமையாக தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியான ஒரு செயலே. தாக்குண்டால் புழு கூட தரை விட்டு தீ துள்ளும் என்பதைப் போல் நெடுங்காலமாக காவேரிப் பிரச்சனையில் பொறுமை காத்து வந்த தமிழ் மக்கள் இதில் இன்று தூண்டப்பட்டிருக்கிறார்கள். எனக்கும் இந்த பிரிவுனை, வகுப்புவாதம் என்பதில் எல்லாம் உடன்பாடில்லை. ஆனால் செவிடர்களுக்கு எட்ட வேண்டுமென்றால் சற்று உரக்கப் பேசியாக வேண்டும். அப்படி இன்று நாம் உரக்கப் பேசியது தான் இந்த எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு இன்றளவில் ஒரு எழுச்சியே. கர்நாடகம் போல் வன்முறை ஏதும் இல்லாமல் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே இந்த எழுச்சி அரங்கேறியுள்ளது. ஆனால் இன்னமும் கர்நாடகமும் தில்லியும் செவிடர்களாகவே இருக்கும் பட்சத்தில் இது அமைதியாகவே தொடருமா என்று உறுதி கூற முடியாது.

நாம் அனைவருமே தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி பேசும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வும், கொஞ்சமேனும் மனித நேயமும் நம் மக்களுக்கும், முக்கியமாக நம் அரசியல்வாதிகளுக்கும் வந்து விட்டால் இது போன்ற வெறுக்க தக்க விளைவுகள் தடுக்கப் படலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதை நிலையை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதுவரை நாம் பொறுமையையும் நம் உரிமையையும் ஒரு சேரக் காத்து நிற்போம்.

நன்றி,
சரவணன்.

Tuesday, April 22, 2008

வணக்கம்

வணக்கம்!!

இதோ தமிழ் புத்தாண்டில் தொட்டு தொடங்கி விட்டது என் வலை பதிவு. நிரம்ப படிக்கக் கூடியவன் என்ற ஒன்றையே தகுதியென நினைத்து தொடங்கி விட்டேன். இங்கே என் கருத்துக்கள், கனவுகள், கோபங்கள், ஆசைகள், அழுகைகள் என அனைத்தையும் பதிவு செய்வதாக உத்தேசம்.

நான் தொடங்குவதற்கு முன் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். ஏன் இந்த முயற்சி? எதற்காக இந்த பதிவு? சிறு வயது ஆசையா? ஊடக ஆர்வமா? பொழுது போக்கவா? அங்கீகாரத் தேடலா? அல்லது ஆத்மார்த்தமான தேடலா? எழுத்தாளனாக முயற்சியா? சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்புகிறேனா? எனக்கும் எழுத தெரியும் என என் நண்பர்களுக்கு சொல்லத் துடிக்கும் ஆணவமா?
எனக்குத் தெரியவில்லை.

தமிழில் எழுதியே பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழில் சிந்திக்கக் கூட முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு அச்சம் என்னுள் வரத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தை உங்களை போன்ற சக வலைப் பதிவாளர்களின் விமர்சனங்களின் மூலம் களைந்தெறிய நான் எடுக்கும் ஒரு சுயநல முயற்சி. அவ்வளவே!!! மற்றபடி இந்தப் பதிவு ஒரு தனி மனித உணர்ச்சிகளின் வடிகாலாக மட்டும் இல்லாமல், வேறு சிலரின் உணர்ச்சிகளை சிறிதேனும் வருடிச் செல்ல முயலுமாயின் மகிழ்ச்சி.

செம்புனல் என்றால் புது மழை நீர் என்று ஒரு பொருள் உண்டு. அது என்றும் கலங்கி இருப்பது போல் இதில் சிற்சில பிழை இருப்பின் அதை பொறுத்து, திருத்த வேண்டுகிறேன்.

தினம் எழுதுவதற்கு நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. தினம் எழுதத் தெம்பில்லாமல் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையேனும் எழுதலாம் என்று எண்ணி இருக்கிறேன். இத்துணை பெரிய ஒரு வாய்ப்பை மிக எளிதாக்கிய தொழில்நுட்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, நீங்கள் நிச்சயம் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ என் வலை பதிவு தங்கள் விமர்சனத்துக்காக.

நன்றி.
சரவணன்.

என்னைப் பற்றி ...

பெயர் - மு சரவணன்
வயது - 29
படித்தது - இயந்திரப் பொறியியல்.
வேலை - மென்பொருள்
வசிப்பது - நியூயார்க் நகரம்
சொந்த ஊர் - சென்னை, மயிலாடுதுறை.