Monday, May 5, 2008

கட்டாயத் தமிழ்

மீபத்தில் ஒரு வார இதழில் நான் படித்த செய்தி சற்று அதிர்ச்சியாக இருந்தது. மதுரை அருகே பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தமிழ் படிக்க தெரியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி தான் அது. அந்த மாணவனின் புத்திசாலித்தனத்தையும் அறிவுத் திறமையையும் இங்கு நாம் விவாதிக்க வேண்டாம். ஆனால் தன் தாய் மொழியையே படிக்க திணறிய அவலம் தான் இங்கே நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது. அதே வார இதழில் மற்றொரு பக்கத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக சேர்த்தது பற்றியும் படிக்க நேர்ந்தது. இந்தச் செய்தியை பற்றி சில எண்ணங்கள் தான் இந்த பதிவு.

ஏன் இந்த கட்டாய தமிழ் பாடம் என்று யோசித்து பார்த்த பொழுது என் நெருங்கிய நண்பர்களில் பலருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பது நினைவிற்கு வந்தது. அனைவருமே தமிழர்கள் தான். நல்ல திறமையான புத்திசாலிகளும் கூட. அதில் ஒருவர் பாரதியாருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினர் என்பது இன்னும் வேதனைக்குரிய விஷயம். ஏன் இந்த நிலை என்ற ஆராய்ந்து பார்த்தால் பலரும் பல காரணங்களை கூறுகின்றனர்.

ஒரு சிலர் தமிழ் தான் வீட்டில் பேசுகிறோமே அதனால் வேறு மொழி படித்தால் கூடுதல் தகுதி என்று கூறுகின்றனர். தாய்மொழி என்பது ஒருவர் மற்றொருவருக்கு தான் நினைப்பதை தெரிவிக்க உதவும் ஒரு கருத்து பரிமாற்ற கருவி மட்டும் அல்ல. அது நம் கலாச்சாரத்துடன் கலந்துவிட்ட ஒரு உணர்வு. அது ஒரு வாழ்க்கை நெறி. தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தாம் கண்டறிந்ததை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் ஒரு களஞ்சியம். அதை மறந்து தான் இன்று பலரும் தமிழை தவிர்த்து வேறு மொழிகளை பாடமாக படித்து வருகிறார்கள்.

இன்னும் சிலரோ பள்ளியில் மொழிப் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக என்று காரணம் சொல்லுகின்றனர். மற்றும் தமிழில் படித்தால் பல துறைகளை சரிவர புரிந்து கொள்ள முடியாது, மேற் படிப்புகளில் சிரமப் பட வேண்டியிருக்கும் என்கிற வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்தியாவிற்கு அனுவிஞ்ஞானியை தந்தது தமிழ் வழிகல்விதான். இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசரை தந்தது தாய்மொழி கல்விதான்.

தமிழை சரிவர படிக்கத் தவறிய தமிழர்கள் அனைவருமே எதோ ஒரு போலியான காரணத்தைக் காட்டி தத்தம் கடமையை செய்யத் தவறியவர்களே!! அவர்கள் அனைவரும் பாரதியாரை ரசிக்க முடியாத, பொன்னியின் செல்வனை அனுபவிக்க முடியாத, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று யாரையுமே புரிந்து மகிழ முடியாத துரதிர்ஷ்டசாளிகளே!!!

ஆனால் ஏனோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் தமிழ் மொழிப்பற்று ஹிந்தி எதிர்ப்பாகவே பார்க்கப் படுகிறது. அதனால் நான் திராவிடக் கட்சிகளைப் போல் ஹிந்தியை எதிர்க்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தமிழ் படிக்கத் தவறியதைப் போல் நான் ஹிந்தியை படிக்கத் தவறியவன். பல நாடுகளில் சுற்றி திரிபவன் என்பதால் இதன் இழப்பை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை அயல் நாடுகளில் இந்தியர்கள் என்னை இந்தியன் என்றறிந்து ஹிந்தியில் பேச முயலும்போது, “ எனக்கு ஹிந்தி தெரியாது “ என்று பல முறை ஒரு வித சங்கடத்துடனே கூறி இருக்கிறேன். உடன் அவர்கள் " ஓ தமிழ்நாடா " என்று கேட்கும் பொழுது அது ஒரு பெருமையாக எனக்குத் தோன்றியதில்லை.

ஆயினும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்னைப் பொறுத்தவரை தவறாக புரிந்து கொள்ளப் பட்டு இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் நடந்தது ஹிந்தி மொழி எதிர்ப்பு அல்ல. கட்டாய ஹிந்தி திணிப்பை தான் எதிர்த்தனர். இன்றும் தமிழ்நாட்டில் ஹிந்தி பலரால் பாடமாக படிக்கப் பட்டு வருகிறது. ஹிந்தி பிரச்சார சபா இன்றளவிலும் தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் 1960 களின் காலகட்டத்தில், வேறு மொழி பேசும் மக்களை அறவே மறந்து பெருவாரியான மக்கள் பேசும் மொழி என்ற காரணத்தை சொல்லி, ஹிந்தியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்க சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தால் ஏற்பட்ட ஒரு கசப்பின் விளைவுதான் அன்றைய கடுமையான எதிர்ப்பு. அப்படி ஒரு கசப்புணர்ச்சியில் அண்ணா அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய "அதிகம் பேசப்படும் மொழி என்பதால் ஹிந்தி அலுவல் மொழி என்றால் இந்தியாவில் அதிகம் இருக்கும் எலியை விட்டு ஏன் நாம் புலியை தேசிய மிருகம் என்று அறிவித்தோம்" போன்ற கேள்விகள் தவறாகத் தோன்றவில்லை.

அதே நேரத்தில் அந்த எதிர்ப்பை முழுவதும் தவறு என்றும் நாம் கூற முடியாது. பக்கத்து மாநிலங்களைப் பார்க்கும் பொழுது மத்திய அரசு 1960 களில் கூறியது போல் நாம் முழுமையாக ஹிந்தியை ஒத்துக்கொண்டு இருந்தோமானால் இன்றைய பெங்களூர், ஹைதராபாத் நிலை தான் சென்னைக்கும் வந்து இருக்கும். என் கன்னட நண்பன் ஒருவன் ஒவ்வொரு முறை சென்னை - பெங்களூர் இரயிலைவிட்டு பெங்களூரில் இறங்கும் போது முதலில் அவனிடம் பேசப்படும் மொழி ஹிந்தி, பின்பு தமிழ், பின்பு ஆங்கிலம், கடைசியாகவே கன்னடத்தில் பேசுகிறார்கள். ஹைதராபாத்திலும் இதே நிலை தான். இந்த நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லாததற்கு அந்த எதிர்ப்பு ஒரு முக்கிய காரணம்.

ஆனால் இந்த எதிர்ப்பு ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டதும், தமிழ் மக்களை ஹிந்தி எதிர்ப்பாளர்கள் என சித்தரித்ததும் தான் துரதிர்ஷ்டவசமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் மாநில மொழி என்கிற அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கும் சமயத்தில் ஹிந்தியையும் தேசிய மொழி என்ற வகையில் ஒரு மூன்றாம் நிலை மொழிப் பாடமாக அறிவுருத்துவதில் தவறேதும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இந்த தமிழ் கட்டாய பாடத்தை பலரும் இன்று எதிர்க்கின்றனர். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதாக கேலி செய்கின்றனர். ஆனால் அந்த குண்டுச் சட்டி மட்டுமே நமக்கு சொந்தமான ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது. நமக்கு சொந்தமானதை நாமே பயன் படுத்தாமல் பரண் மீது வைத்துவிட்டால் அது மொத்தமாக காணாமல் போய்விடக் கூடும். பின்பு அதை நாம் எங்கோ ஒரு அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க முடியும். அது போல் நடக்காமல் இருக்க இன்னொரு மொழிப் போர் தேவைப்படாது, இந்த அரசாணை மட்டுமே போதும் என்றே நம்புவோம்.

நன்றி

மு. சரவணன்.

No comments: